மட்டக்களப்பு மாவட்டத்தில் 96 கி.மீ தூர யானை வேலி அமைக்கும் திட்டத்தில் போரதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 1 கி.மீ கூட உள்வாங்கப்படவில்லை இதற்கான காரணம் என்ன. வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு புதிதாக வாகனங்கள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எத்தனை வாகனங்கள் வழங்கப்பட்டன. யானை - மனித மோதல் தொடர்பில் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்துவதில் ஏன் தாமதம் நிலவுகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுற்றாடல் அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
இலங்கை அரசியல்
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 87 கிலோமீற்றர் தூரத்துக்கு யானை வேலி அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் உண்மையில் 96 கி.மீ தூரத்துக்கு வேலி அமைப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
யானை வேலி அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் பிரதேச சபைகள் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதால் பணிகள் ஏதும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போது புதிதாக 05 உப அலுவலகங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் தற்போது அது தொடர்பில் முறையாக பதிலளிக்கவில்லை.வனஜீவராசிகள் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
96 கி.மீ யானை வேலி நிர்மாணிப்பு திட்டத்தில் மட்டக்களப்பு போரதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 1 கி.மீ கூட உள்வாங்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன? வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு புதிதாக வாகனங்கள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எத்தனை வாகனங்கள் வழங்கப்பட்டன.இது தொட்பில் மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் உத்தியோகத்தர் சுரேஸிடம் வினவிய போது தமக்கு தெரியாது என்று குறிப்பிட்டார்.
யானை - மனித மோதலில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னிலையில் உள்ளது.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இணங்கிய விடயங்களை செயற்படுத்துவதிலும் சிக்கல் காணப்படுகிறது. ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் எப்போது அமுல்படுத்தப்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை - வவுனதீவு மண்முனை மேற்கு பிரதேச சபையால் புதிய முன்மொழிவு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுக்குத் தேவையான காணியை வனஜீவராசிகள் திணைக்களமும், வனவளத்திணைக்களமும் விடுவிக்காமல் திட்டத்தை தாமதப்படுத்துகின்றன.
இந்த முன்மொழிவை சாதகமாக ஆராய்ந்து குறித்த காணியை விடுவித்தால் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும். அவ்வாறு காணியை விடுவிப்பதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும் என்றார்.
