பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு – ‘விரைவில் வருவேன்’

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலல் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

மட்;டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது பெப்ரவரி 25ஆம் திகதி வரை வழங்கினை ஒத்திவைத்தார்.

மேல் நீதிமன்ற நீதிபதி இஸ்ஸடீன் இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அப்துல்லா முன்னிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் விரைவில் தான் வெளியில் வந்து அனைவரையும் சந்திப்பேன் என நீதிமன்றில் இருந்து வெளியில் வரும்போது பிள்ளையான் தெரிவித்தார்.