புத்தாண்டு தினத்தில் இடம்பெறவிருந்த அனர்த்தம் ; தீயணைப்பு வீரர்களின் துணிகரத்தால் தடுக்கப்பட்டது.

(திலக்‌ஷி) 
மட்டக்களப்பு மாநகரில் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம் ஒன்று தீயணைப்பு வீரர்களின் துணிகரத்தால் தடுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு செல்வநாயகம் வீதி மூன்றாவது ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இன்று (01.01.2020) எரிவாயு கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்குத் தகவல் அறிவிக்கப்பட்டதும், விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் வெடிக்கத் தயாரான நிலையில் எரிந்து கொண்டிருந்த எரிவாயுக் கொள்கலனும் தீயணைப்பு வீரர்களின் துணிகரத்தால் மீட்கப்பட்டது. 

அதிக சனநெரிசல் மிக்க இப் பகுதியில் புத்தாண்டு தினத்தில் உயிர் ஆபத்துகளோ பாரிய பொருட் சேதங்களோ  ஏதுவும் ஏற்படாமல் துரிதமாகச் செயற்பட்ட மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு பிரதேச மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.