மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களுடனான மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டமானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.ரீ.பி. டெஹிடேனிய அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மாநாட்டு மண்டபத்தில்
நேற்று (27) இடம் பெற்றது.
மாவட்டத்தில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இக்கலந்துரையால் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் நிறுவன வலையமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்கவும், எதிர்நோக்கும் சவால்களை கையாள்வதை நோக்கமாகக் கொண்டும் இக்கூட்டம் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மனித உரிமைகள் பிராந்திய காரியாலய இணைப்பாளர் எ.எல். இஸ்சதீன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்கள் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் கடந்த காலங்களில் இடம் பெற்ற நிகழ்வுகளை ஆதாரங்களாக சுட்டிக்காட்டி தெளிவூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.