மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 02 வருட பூர்த்தியைக் கருதி இன்றைய தினம் சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் பாரிய கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 02 வருட பூர்த்தியைக் கருதி முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஜனாதிபதியும் நீண்டகாலமாக காணப்படும் தமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப்பெற்றுத்தர வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது மேய்ச்சல் தரை காணியை வர்த்தமானிப்படுத்துமாறு கோரியும் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரியும் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி போராட்டம் நடைபெறும் இடம் வரையில் நடைபெற்றுத.
அதனை தொடர்ந்து பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மயிலத்தமடு மாதவணை கால்நடை மேய்ச்சல்தரை பகுதியில் கால்நடைகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் எதிராக நடைபெறும் அநீதிக்கு எதிரான அறவழிப்போராட்டம் இரண்டு வருடங்களை கடந்துள்ள அதாவது 730வது நாளாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மயிலத்தமடுவில் உள்ள சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை வெளியேற்று,பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதாலா தீர்வு வழங்குவதில் தாமதம்,கால்நடை பண்ணையாளர்களின் கோரிக்கையினை நிறைவேற்று,பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு மேய்ச்சல்தரையினை வழங்கு,730நாட்கள் கடந்தும்தீர்வு வழங்காதது ஏன் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் தமது நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோசங்களும் முன்வைக்கப்பட்டன.
பாரம்பரியமாக காலநடை வளர்ப்பாளர்களால் மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரையில் அயல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அத்துமீறிய விவசாய நடவடிக்கை, காடழிப்பு மற்றும் அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளைக் கொல்லுதல், பண்ணையாளர்களை அச்சுறுத்துதல் போன்ற செயற்பாடுகளை உடன்நிறுத்தி அத்துமீறிய செயற்பாட்டாளர்களை வெளியேற்றி குறித்த பிரதேசத்தை தங்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சற்தரையாகப் வர்த்தமானி பிரகடணப்படுத்தக் கோரி கடந்த 2023 ஆண்டு இதே நாளில் கால்நடை பண்ணையாளர்கள் தங்கள் தொடர் கவனயீர்ப்பினை முன்னெடுத்திருந்தனர்.
இருப்பினும் அரசாங்கங்கள் மாறினாலும் குறித்த மேய்ச்சற் தரை விடயம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எந்த அரசாங்கத்தினாலும் எடுக்கப்படாமை குறித்தும் தங்களின் கோரிக்கைக்கு எந்த அரசும் ஒரு நிரந்தரத் தீர்வினை வழங்க முன்வரவில்லை என்ற நிலைப்பாட்டில் இரண்டு வருட பூர்த்தியினை தற்போதைய அரசுக்கு தங்களின் கோரிக்கையை வெளிப்படுத்தும் முகமாக இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இ.சிறிநாத், பிரதேச சபைத் தவிசாளர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள்,மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மகஜர் ஒன்று அரசாங்கத்திற்கு வழங்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சங்கத்தின் தலைவர் நிமலனால் வழங்கிவைக்கப்பட்டது.