மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு (Capacity Building) செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (22) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக இந்தியாவில் இருந்து வருகை மேற்கொண்ட காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பஞ்சநதம் அவர்கள் அரச சேவையின் செயல்திறனை மேம்படுத்துதல், பணிச்சூழலில் நேர்மறைச் சிந்தனையை வளர்த்தல், சிறந்த நிர்வாக நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்குதல் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.
மேலும், மனவெழுச்சி (Motivation), மனஅழுத்த மேலாண்மை, அனுபவங்களின் அடிப்படையில் பிரச்சினைகளைத் திறம்படக் கையாளும் நடைமுறைகள் குறித்தும் வளவாளரால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்துதல், மனிதவள முகாமைத்துவம், அலுவலர்களைத் திறம்பட வழிநடத்தும் உத்திகள், குழு ஒருங்கிணைப்பு மற்றும் முடிவெடுக்கும் திறன்களை வலுப்படுத்துதல் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
அரச அதிகாரிகள் தங்களது தொழில்முறைத் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வதன் அவசியம், பொறுப்புணர்வுடன் சேவையாற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலின் தேவையும் இச்செயலமர்வில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஷ், பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேசசபை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.










