44 வருடங்களுக்குப் பின் வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை

2024 ஆம் ஆண்டு தேசிய மட்ட உடற்பயிற்சி கண்காட்சி போட்டியில் மட்/வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளனர். அத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான உடற்பயிற்சி கண்காட்சியின் சிறந்த அணித் தலைவியாக   செல்வி.S.சேசாங்கி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதற்கு பொறுப்பாசிரியராக திருமதி.சுவீற்றா பிரியாழினி எபநேசர் தர்ஷன்  செயற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இவர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலையின் அதிபராகிய திருமதி. தவத்திருமகள் உதயகுமார்  அம்மணி அவர்களின் தலைமையில் Band வாத்திய குழுவின் இசையுடன் மாணவர்களும் பொறுப்பாசிரியரும் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களும், பயிற்றுவிப்பாளர்களும் மாலைகள் சூடி அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 

இவ் நிகழ்வில் வலயக் கல்வி பணிமனையின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் V. லவக்குமார் அவர்களும் இணைந்து இந்த நிகழ்வை சிறப்பித்துடன் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

அத்துடன் பாடசாலை சமூகத்தினரும், பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும்  பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.