செட்டிபாளையத்தில் நடைபெற்ற பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2024


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகம், கிராம ஆலயங்கள், பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வானது (2024.04.10) பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட செயலாளர் திருமதி. ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களும், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள மாகாண பணிப்பாளர் உதயகுமார் சிவராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற மைதான மற்றும் குழுநிலை போட்டிகளின் இறுதிப் போட்டி நிகழ்வுகளும் , வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் முதலாம் இடத்தினையும் (தங்கம் - 24, வெள்ளி - 22, வெண்கலம் - 12 ) செட்டிபாளையம் நீயூட்டன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும் (தங்கம்- 12, வெள்ளி - 11, வெண்கலம் - 10) பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர் சா. அறிவழகன், செட்டிபாளைய கிராம ஆலய மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.