கொவிட் பரிசோதனைக்கான மருத்துவ உபகரணம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கிய தொழிலதிபர்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக அதிகரித்துவரும் கொரனா தொற்று காரணமாக தினமும் பெருமளவான பரிசோதனைகள் முன்னெடுப்பதற்கு போதியளவான வசதிகள் இல்லாத காரணத்தினால் சமூக செயற்பாட்டாளர்கள் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றனர்.

இதனடிப்படையில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பினை சேர்ந்த தொழிலதிபரான நல்லரெட்னம் என்பவரினால் இந்த மருத்துவ உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கொவிட் செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் நிசாந்த கொஸ்வத்த,மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.கலாரஞ்சனி,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கொவிட் சோதனைகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் 1.52 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணம் இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட கொரனா செயலணி விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தொழிலதிபர்கள்,பொது அமைப்புகள் என பல்வேறு வகையிலான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.