மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளம் -மாவட்ட சுகாதார பணிப்பாளர்


மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று (18)காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 66 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இரண்ட மரணங்களும் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 32பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 08பேரும் கோரளைப்பற்று மத்தி பிரிவில் 06பேரு{ம் களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 05பேரும் செங்கலடி சுகாதார பிரிவில் நான்கு பேரும் ஆரையம்பதி,வாழைச்சேனை சுகார பிரிவில் தலா மூன்று பேரும் ஏறாவூர் சுகாதார பிரிவில் இரண்டு பேரும் வெல்லாவெளி,கிரான் சுகாதார பிரிவுகளில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மணித்தியாலத்தில் ஆரையம்பதியில் ஒரு மரணமும் மட்டக்களப்பில் ஒரு மரணமுமாக இரண்டு மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் கொரனா தொற்றாளர்கள் அதிகரிப்பு காரணமாக மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்லடி வேலூர்,சின்ன ஊறணி,திருச்செந்தூர் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் இவ்வாறு முடக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளும் தற்போது சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 1516 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 21பேர் மரணமடைந்துள்ளனர். மூன்றாவது அலையில் 533கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 12பேர் மரணமடைந்துள்ளதாகவும் டாக்டர் மயூரன் தெரிவித்தார்.

கடந்த மாதம் 165கொரனா தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 250 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதனால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதுடன் சுகாதார நடைமுறைகளைப்பேணவும் தேவையற்றவகையில் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.