சுவிஸ் உதயம் அமைப்பினால் வாழ்வாதார உதவி

கிழக்கு மாகாணத்தில் சுவிஸ் உதயம் அமைப்பினால் தொடர்ச்சியான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் நோக்கில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு புதிதாக கடையொன்றினை அமைத்துக்கொடுத்து அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பினது கிழக்குமாகாணத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

தனது வாழ்வாதாரத்திற்காகக் கஷ்டப்பட்டிருந்த மட்டக்களப்பு புதுக்குடியிருப்பினைச் சேர்நத இரட்டினசிங்கம் சவுந்தரம் அவர்கள் சுவிஸ் உதயம் அமைப்பினரிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இக்கடை 160000.00 பெறுமதியில்  புதிதாக அமைத்ததுடன் அக்கடைக்கான பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன அத்தோடு  அக்கடையில் சோளம் பொரித்து விற்பனை செய்வதற்காக சோளம் பொரிக்கும் இயந்திரமும் புதிதாக கையளிக்கப்பட்டது

இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,பிரதித்தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன்,பிரதிச்செயலாளர் திருமதி செல்வி மனோகர், கணக்காய்வாளர் நகேந்திரன் உட்பட சுவிஸ் உதய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இவ் உதவியினை வழங்குவதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து எமக்கான உவிகளை மேற்கொண்ட அவ்வமைப்பின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரத்தினசிங்கம் சவுந்தரம் அவர்கள் நன்றிதெரிவித்துள்ளார்.