கலைஞர் சுவதம் விருது பெற்றார் இளங்கலைஞர் தேசகீர்த்தி செ..துஜியந்தன்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலை இலக்கியத்துறைக்காக ஆற்றிவரும் சேவையை பாராட்டி இளங்கலைஞர் தேசகீர்த்தி செ.துஜியந்தன் கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்ட்டுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தேசிய இலக்கியப்பெருவிழாவில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர்கள், சமூர்த்தி தலைமை முகாமையாளர்கள், ஏனைய அதிகாரிகள் உட்பட பலரினால் பாராட்டி இளங்கலைஞர் செ.துஜியந்தன் கலைஞர் சுவதம் விருதினை பெற்றுக்கொண்டார்.

இளங்கலைஞர், தேசகீர்த்தி  செ.துஜியந்தன் கடந்த 38 வருடங்களுக்கு மேலாக கலை இலக்கியத்துறைக்கு தனது பங்களிப்பினை நல்கிவருகின்றார். பாண்டிருப்பைச் சேர்ந்த இவர் தனது ஐந்து வயதில் பாசிபடர்ந்த மலை முருகா பங்குனி தேர் ஓடும் மலை எனும் முருகன் காவடிப்பாடல் மூலம் மேடை ஏறியவர். இவர் நடனம், ஓரங்கநாடகம், மிமிக்கிரி, பாட்டு, நாடகம், நடிப்பு, வில்லிசை, சிறுகதை, கவிதை, பாடல் ஆக்கம், எழுத்து, இயக்கம், குறும்படத்துறை, சஞ்சிகை ஆசிரியர், ஊடகம், பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர் எனப் பல துறைகளில் கால்தடம் பதித்துள்ளார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரிவில் முதன் முதலில் குறும்படம் எடுத்தவர் என்ற பெருமை இவருக்குண்டு. இவரது கதை,திரைக்கதை, இயக்கம் நடிப்பில் சிறுவர் துஸ்பிரயோகத்தினை மையமாக வைத்து வெளிவந்த விரட்டியடி குறும்படம் 2013 இல் கிழக்கு மாகாண சிறுவர்நன்னடத்தை திணைக்களம் நடத்திய குறும்படப்போட்டியில் முதலிடம் பெற்று 50 ஆயிரம் பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டது. ஆவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதினால் ஏற்படும் பாதிப்பு பற்றிய பாழாய்ப்போன பயணம் எனும் குறும்படம் சக்தி தொலைக்காட்சியில் காண்பிக்கப்ட்டதுடன் அப்படத்தின சிறந்த நடிப்புக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். வட்டி, பாழாய்ப்போன பயணம், பார்வை ஆகிய திரைப்படங்கள் நோர்வோ தமிழ்ச்சங்கம் நடத்திய 40 ஆவது குறும்படப்போட்டியில் பங்குபற்றி சிறந்த குறும்படங்களாக 2019 இல் தெரிவு செய்யப்ட்டு பாராட்டுப்பெற்றது. மேலும் விமோசனம், யார்பிச்சைக்காரன், வெறுஞ்சோறு ஆகிய குறும்படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார். 

மணிப்புறா, விருந்து ஆகிய காலாண்டு சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார்.
இவரது கலை இலக்கியப்பணிகளுக்காக கிழக்கு மாகாண கலாசார திணைக்களம் 2016 இல் இளங்கலைஞர் விருது வழங்கிகௌரவித்துள்ளது. 2012 ஆம், 2013 ஆம் ஆண்டில் சிறந்த ஊடகவியலாளருக்கான சமூக அபிவிருத்தி செய்தியாளார் விருதினைப்பெற்றுள்ளார், தெற்காசிய சமாதானநீதவான்களின் பேரவையினால் 2017 இல் தேசகீர்த்தி விருது வழங்கிகௌரவிப்பட்டார். 2018 இல் இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் லக்டோமீடியா நெற்வேர்க் அமைப்பினால் கலைமாமணி விருது ஆகிய விருதுகளைப்பெற்றுள்ளார்.

இன்று இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞர் சுவதம் விருது வழங்கிகௌரவிக்கப்ட்டுள்ளார். இவர் சமாதானநீதவான் என்பதோடு அகரம் சமூக அமையம் என்ற அமைப்பின் தலைவராகவும், தமிழர் ஊடகமையத்தின் செயலாளராகவும், பல்வேறு சமய, சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதியாகவும் இருந்து செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.