பெரியகல்லாறு பகுதியில் ஆயுதங்களை காட்டி கொள்ளை

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று அதிகாலை ஆயுதங்களுடன் வந்த சிலர் வழிப்பறி கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.00மணியளவில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு ஆலையடி பகுதியில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இரண்டு பேர் ஆயுதங்களுடன் நின்று அதிகாலையில் வீதியினால் பயணித்தவர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீன்வியாபாரிகள் சுமார் 12பேரிடம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.