பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தினை தேடி மீண்டும் தோண்டப்படும் முனைக்காடு மயானம்

2008 ஆம் ஆண்டு ஆயுத குழுவினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தினை தேடி தோண்டும் நடவடிக்கைகள் இரண்டாவது தடவையாகவும் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பொதுமயானத்தில் புதைக்கப்பட்டதாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில்  கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதகுழுவின் உறுப்பினர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சடலத்தினை தோண்டும் நடவடிக்கை கடந்த 11.06.2019 மாலை நடாத்தப்பட்டன.

அன்றைய தினம் எந்தவித சடலங்களும் மீட்கப்படாத நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்று வியாழக்கிழமை மாலை சடலத்தினை தோண்டும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கடந்த 2008 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் வயது (25)  என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த  நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து  வெளியில் சென்றிருந்த நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போயுள்ள. பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில்  ஆயுதகுழுவின் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன்,  மதன், என்றழைக்கப்படும்  தம்பிமுத்து செல்வராசா, லிங்கன், என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம்   ஆகிய 3 சந்தேகத்தில் ஓட்டமாவடி, களுவாஞ்சிகுடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர்.

இவர்களிடம் மேற் கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தத.

இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சிஜடி சப் இன்பொஸ்டர் என். நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த  மே மாதம் வியாழைக்கிழமை (23) அனுமதிகோரியிருந்தமையின் அடிப்படையில் சடலத்தை   மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் எந்தவிதமான எச்சங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகலாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில் கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏலவே இறந்துள்ளதுடன், இனியபாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும் ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் எனப்படுபவர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக தோண்டப்படும் இடத்திற்கு தயானந்தன், மதன், என்றழைக்கப்படும்  தம்பிமுத்து செல்வராசா, லிங்கன், என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு கடந்த முறை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.