ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளரின் வீட்டின் மீது தாக்குதல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள லோகநாதன் நிரோசன் என்பவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

சீலாமுனையில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு நேற்று இரவு சென்ற பத்துக்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு வளவினுள் நுழைந்தவர்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் நடாத்தியதை தொடர்ந்து வீட்டில் இருந்த மரங்களையும் வெட்டியுள்ளதுடன் வீட்டின் முன்பாகவிருந்த பொருட்களையும் தூக்கிவீசியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் லோகநாதன் நிரோசன் தெரிவித்தார்.

தமது அரசியல் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ளமுடியாதவர்களே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்மை கொலைசெய்யும் நோக்குடனேயே அவர்கள் வந்ததாகவும் தான் வீட்டினைவிட்டு வெளியேவராத காரணத்தினால் தனக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லையெனவும் நிரோசன் தெரிவித்தார்.

இதேநேரம் இங்கு வருகைதந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பிளர் ஹிரிதரன் ஹரி சம்பவம் தொடர்பில் மாவட்ட முகாமையாளருடன் கலந்துரையாடினார்.