குண்டுத்தாக்குதல் இனங்களை ஒற்றுமைப்படுத்தியுள்ளது –மாவட்ட அரசாங்க அதிபர்

இந்த நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பிரிந்துபோயிருந்த மதங்களையும் இனங்களையும் இந்த நாட்டில் ஒன்றுபடுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் ஆலயமும் இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து நடாத்திய உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பௌத்த,இந்து,கிறிஸ்தவ மதகுருமார்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிர்நீர்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிடங்கள் மௌன பிரார்த்தனைகள் நடைபெற்றதை தொடர்ந்து நினைவுரைகள் நடைபெற்று இறுதியான உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காக உயிர்நீர்த்தவர்களின் படங்களுக்கு முன்பாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.

கிறிஸ்தவ சபையில் உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூருவதற்கான நடவடிக்கையினை இந்து ஆலயங்கள் முன்னெடுத்துவருவது சிறந்த மத ஐக்கியத்திற்கு வழியேற்படுத்தும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து பயங்கரவாதிகள் நடாத்திய இந்த கோரத்தாக்குதலை என்ன நோக்கத்திற்காக நடாத்தப்பட்டதோ அவர்களின் அந்த நோக்கத்தில் இருந்து பின்வாங்கப்பட்டுள்ளார்கள்.

இந்த தாக்குதல் இந்த நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளையும் ஒன்றிணைத்திருக்கும் நிலையினை நாங்கள் பார்க்ககூடியதாகவுள்ளது.அந்த சம்பவம் நடைபெற்றபோது பூணுல்கள் சிலுவையினை சுமந்ததை நாங்கள் கண்டோம்.காவியுடைகள் கண்ணீர்வடித்தன.காக்கிச்சட்டைகள் காவல் பார்த்தன.அதேபோன்று எமது தொப்பிகள் கூட எமது உறவுகளுக்காக மனவேதனைப்பட்டன.

நாங்கள் அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து வீறுகொண்டு எழுந்துள்ளோம் என்றுதான் நாங்கள் கூறவேண்டும்.அதேபோன்று பல்வேறு வகையான பார்வையில் பார்க்கப்படுகின்ற மதங்கள் எல்லாம் ஒன்றிணைந்திருக்கின்றன.இந்த தாக்குதல் ஊடாக மதங்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலை நடாத்தியது ஒரு மதம்சார்பான குழுவினராகும்.இருந்தபோதிலும் அனைத்து மதங்களும் இணைந்து ஒரு எழுச்சியேற்பட்டுள்ளது.