காத்தான்குடியில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட கேரளா கஞ்சா களுவாஞ்சிகுடியில் சிக்கியது

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் வானில் கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ள பொலிஸார் அதனைக்கொண்டு சென்ற நான்கு பேரையும் கைதுசெய்துள்ளனர்.

இன்று பகல் காத்தான்குடியில் இருந்து அக்கரைப்பற்றுக்கு கொண்டுசென்ற சொகுசு வானிலேயே இந்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன தெரிவித்தார்.

காத்தான்குடியில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சொகுசு வானில் மிகவும் இரகசியமான முறையில் குறித்த கேரளா கஞ்சா மறைத்துகொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு மற்றும் கிரான்குளம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் சைகையினை மீறிச்சென்ற நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வீதி தடை ஏற்படுத்தப்பட்டு குறித்த வான் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

வானில் இரண்டு பொதிகளில் பொதிசெய்யப்பட்ட சுமார் ஐந்து கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா இதன்போது மீட்கப்பட்டதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன தெரிவித்தார்.

இதன்போது நான்கு பேர் குறித்த வானில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வானும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.