களுவாஞ்சிகுடியில் பிரபல சோதிடரின் வீட்டில் கொள்ளை

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள பிரபல சோதிடர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை பிற்பகல் களுவாஞ்சிகுடி வடக்கில் உள்ள சோதிடர் ஒருவரின் வீடே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டிவிட்டு களுவாஞ்சிகுடியில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றின் உற்சவத்திற்கு சென்ற சமயம் கொள்ளையர்கள் வீட்டின் பின்கதவினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்து இந்த துணிகர கொள்ளையை நடாத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 12பவுண் தங்க நகைகளும் 70ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் மாவட்ட பொலிஸ் குற்றப்புலானாய்வுத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.