மீன்பிடிக்கச்சென்றவர் சடலமாக மீட்பு-மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போனவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை கல்லடி பாலம் அருகில் கரையொதுங்கியுள்ளது.

இன்று வியாக்கிழமை அதிகாலை 2.00மணியளவில் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்கச்சென்ற சின்ன உப்போடை,வாவிக்கரை வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.அழகேந்திரராஜா(62வயது) வீடு திரும்பாத நிலையில் அவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

இந்த நிலையில் குறித்த குடும்பஸ்த்தரின் சடலம் இன்று காலை கல்லடி பாலம் அருகில் உள்ள லேடிமெனிங் வீதியில் உள்ள வாவிப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் சேதமடைந்த நிலையில் காணப்படுவதன் காரணமாக குறித்த நபரை முதலை தாக்கியிருக்கலாம் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு வாவிப்பகுதியில் இறந்த நிலையில் சுமார் ஊழு அடி நீளமான முதலையும் இந்த தேடுதலின்போது மீட்கப்பட்டுள்ளது.