இஞ்ஞாசியார் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாவலடி கோல்ட்பிஸ் சம்பியன்

இஞ்ஞாசியார் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுளது.
கல்லடி,டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான இந்த சுற்றுப்போட்டி கடந்த இரண்டு வாரங்களாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றுவந்தது.

மட்டக்களப்பு உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அதன் இறுதிப்போட்டி வெபர் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த இறுதிப்போட்டியில் நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக்கழகமும் ஏறாவூர் இளந்தாரகை(வை.எஸ்.எஸ்.சி.)விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக்கழகம் 05-02 என்ற கோல்கணக்கில் வெற்றிவாகை சூடியது.

இறுதி பரிசளிப்பு நிகழ்வில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்க தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருமான மா.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறந்த கோல் காப்பாளராக நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த கோல்காப்பாளர் வீமன் தெரிவுசெய்யப்பட்டதுடன் போட்டியின் சிறந்த வீரராக நாவலடி கோல்ட்பிஸ் வீரர் ஆ.சானுஜன் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது முதல் இடத்தினைப்பெற்ற நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தினைப்பெற்ற ஏறாவூர் இளந்தாரகை(வை.எஸ்.எஸ்.சி.) விளையாட்டுக்கழகம் மூன்றாம் இடத்தினைப்பெற்ற மட்டக்களப்பு மைக்கல்மென் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றுக்கான வெற்றிக்கேடயங்களும் பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.