பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “உள்ளூராட்சி வாரம் – 2026” வேலைத்திட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வை முன்னிட்டு, சுற்றாடல் மரநடுகை மற்றும் சர்வதேச ஓசோன் படலப் பாதுகாப்பு தினத்தை முன்னிலைப்படுத்திய விழிப்புணர்வு நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் இன்று (16.09.2026) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
தற்போது நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து பதாகைகளை ஏந்தியவாறு நடைபவனியில் ஈடுபட்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச சபையிலிருந்து ஆரம்பமான நடைபவனி, பிரதேச சபை சுற்றுவட்டம் ஊடாக அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து மைதான வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
பிரதேச சபைத் தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உப தவிசாளர் க. ரகுபதி, செயலாளர் எஸ். திவாகரன், கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

.jpeg)

.jpeg)

