அனர்த்த அவசர எச்சரிக்கை

இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறு தினம் (26.11.2025) ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்று தெற்கு நோக்கி, ஆரம்பத்தில் முழுவதும் இலங்கை நிலப்பகுதியூடாக நகர்ந்து பின்னர் இலங்கையின் கிழக்கு கரையில் அரைவாசிப்பகுதி நிலப்பகுதியிலும் அரைவாசிப்பகுதி கடற்பகுதியுமாக நகர்ந்து எதிர்வரும் 27.11.2025 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து கிழக்கு கரையோரமாக நகர்ந்து வடக்கு மாகாணத்தினை அண்மித்து, எதிர்வரும் 30.11.2025 அன்று வடமாகாணத்தில் இருந்து நீங்கி மேலும் வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதே வேளை எதிர்வரும் 26.11.2025 முதல் 29.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 26.11.2025 முதல் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை எதிர்வரும் 27.11.2025 முதல் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணத்தில் ஏற்கெனவே பல ஆறுகள் அவற்றின் கொள்ளளவை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை மிகப்பெரும் கன மழை எதிர்வரும் நாட்களிலும் கிடைக்கவுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற கன மழை காரணமாக நிலம் நிரம்பியுள்ளது. அதேவேளை மிகப்பெரும் கன மழை எதிர்வரும் நாட்களிலும் கிடைக்கவுள்ளன.
==================================
1. ஆகவே இலங்கையின் காலநிலை சார் அனர்த்தமொன்றுடன் தொடர்புடைய அனைத்து திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் 25.11.2025 முதல் 30.11.2025 வரை மிகப் பெரும் மழை, அதிவேக காற்று வீசுகை, வெள்ளப்பெருக்கு தொடர்பில் உடனடி முன்னாயத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் மக்கள் அனைவரும் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை முழுமையாக தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் குளங்களின் வான் பாயும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
3. அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் இப்பேரனர்த்தத்துக்கான வாய்ப்பு பற்றியும், அதன் சாத்தியமான பாதிப்புக்கள் பற்றியும், அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் அனைத்து மக்களுக்கும் தகவல்களைப் பரிமாற்ற வேண்டும். இதற்காக உரிய திணைக்களங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம்.
ஆனால் ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மக்களைப் பதட்டத்துக்குள்ளாக்காமல் தயார்ப்படுத்துவதற்கேற்ற வகையில் அமைதல் முக்கியமானது.
4. காலநிலை சார் அனர்த்தங்கள் முன்கூட்டியே எதிர்வு கூறத்தக்கன. நாம் அந்த எதிர்வு கூறல்களையும் உரிய திணைக்களங்களின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றினால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் எம்மைப் பாதுகாக்கலாம்.
5. நாட்டின் அனைத்து மீனவர்களும் நாளை முதல் (25.11.2025) எதிர்வரும் 30.11.2025 வரை எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம்.
6. வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் எதிர்வரும் 30.11.2025 வரை உரமிடல் மற்றும் கிருமி, களை நாசினி தெளித்தல் போன்ற எந்த விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம்.
7. நாட்டில் அபாயகரமான வீதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
8. எதிர்வரும் 27, 28. 11.2025 கிழக்கு மாகாணத்திற்கு மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
9.எதிர்வரும் 28,29ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
10. எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களினதும், அவற்றில் உள்ளடங்கும் மாவட்டங்களினதும் நிர்வாகங்கள் இது தொடர்பில் போதுமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது சிறந்தது.
==================================
வானிலை தொடர்பான முன்னறிவிப்புக்கள் எப்போதும் மாதிரிகளை(Modelings) அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். அது எப்போதும் 100 வீதமும் அது போன்றே நடக்கும் என கூற முடியாது. சில விலகல்கள் இருக்கலாம்.
அனர்த்த தயார்ப்படுத்தல் நிகழ்ந்து அனர்த்தம் நிகழாமல் போனால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடிய வாய்ப்பிருந்தும் அதற்கு தயாராகமல் இருந்து, அனர்த்தம் நிகழ்ந்தால் ஏற்படும் பாதிப்புக்கள் மீளமைக்க முடியாத பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

- நாகமுத்து பிரதீபராஜா-