மட்டக்களப்பு வலய பாடசாலைகளுக்கான மாணவர் சுகாதார மேம்பாட்டு ஊக்குவிப்பு செயற்திட்டக் கூட்டம் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
வலயக் கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி அவர்களது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இச்செயற்திட்டக் கூட்டத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் அவர்களுடன் இணைந்து பிராந்தியத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.
இக் கூட்டத்தின் குறிக்கோள் பாடசாலை மாணவர்களுக்கிடையே சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் குறித்ததாக இருந்தது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் அவர்களது கருத்துரையில் “பாடசாலைச் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் அவசியம் ” கல்வி சமூகத்துடன் சுகாதார சேவைகள் இணைந்ததாகவே இருந்தால் மட்டுமே மாணவர் மத்தியில் உண்மையான உடல் உள ஆரோக்கியத்தை மேற் கொள்ள முடியும், அத்தோடு மாணவர்களையும் பெற்றோரையும் விழிப்படையச் செய்யும் திறன் ஆசிரியர்களைச் சார்ந்தது என்றும் மாணவர் நலன் சார்ந்த எந்தவொரு சுகாதார மற்றும் உளவியல் சார்ந்த தீர்வுகளுக்கும் எம்முடன் எந்த நேரத்திலும் ஆசிரியர்களாக பெற்றோர்களாக தொடர்பு கொள்ள முடியும் என குறிப்பிட்டதுடன் தொடர்பு இலக்கங்களையும் வழங்கினார்.
தேசிய ரீதியான சுற்று நிருபத்திற்கு அமைவாக பாடசாலைகளில் எடுக்கப்பட வேண்டிய ஆரம்ப கட்ட அடிப்படை சுகாதார கட்டமைப்புக்கள், பாடசாலை சுகாதாரச் சங்க நடவடிக்கைகள்,
சுகாதார மேன்பாடுகள், முன்பள்ளி, மாணவர் நலன் தேவைகள், தொற்றக்கூடிய நோய்கள் தொடர்பான பிரச்சினைகள், தொற்றா நோய்கள் (டெங்கு), பாலியல் சம்மந்தமான நோய்களும் பாலியல் கல்வியின் அவசியதன்மையும், மாணவர் சுகாதார நடவடிக்கைகளும் தொழுநோய் சம்மந்தமான முற்காப்புடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள், மாணவர் உளநலம் தொடர்பான பாதுகாப்பு, முற்காப்பு திட்டங்கள், பாடசாலை சுகாதார மேம்பாட்டில் உள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகள்,
சுத்தமான குடிநீர் ஊட்டச்சத்து நடவடிக்கைகள் சார்புநிலை பாடத்திட்டச் செயல்பாடுகள்,
மாணவர்களுக்கான உடல் வலுப்பெறும் விளையாட்டுக்களின் அவசியம்,
மாணவர் சுகாதார கழகம்,
பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளின் தரம் பேணல், மாணவர் மத்தியில் அச்சமான உணர்வை இல்லாது செய்தல் போன்றவை தொடர்பில் கருத்துக்களும் ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டன.