மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் பிரசன்னத்தில் சபை மண்டபத்தில் இன்று (07) நடைபெற்றது. இதன்போது புதிய தவிசாளருக்கான முன்மொழிவினை உள்ளூராட்சி ஆணையாளர் கோரினார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார் முன்மொழியப்பட்டார். தவிசாளருக்கான வேறு தெரிவுகள் இன்மையால் ஏகமனதாக மண்முனைப்பற்றின் தவிசாளாராக கா.செந்தில்குமார் தெரிவுசெய்ப்பட்டார்.
பிரதேச சபையின் உப தவிசாளருக்கான பதவியானது தற்போது வறிதாக்கப்பட்டுள்ளமையினால், மீண்டும் குறித்த பதவிக்கான வெற்றிடத்தினை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் என உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
முன்னர் தெரிவுசெய்யப்பட்ட தவிசாளர் த.மாணிக்கராஜா அண்மையில் காலமாகியதன் காரணமாக இந்த புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய தவிசாளர் தெரிவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்யின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.