தமிழர்தம் தொன்மையினைச் சொல்லும் அமிர்தகளி மாமாங்கப் பேராலயம்(கட்டுரை)


து.கௌரீஸ்வரன்,
இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் தொன்மையினை அறிந்து கொள்ள உதவும் சான்றாதாரங்களுள் ஒன்றாகத் தொன்மையான கோவில்களும் அவற்றின் வரலாறுகளுங் கொள்ளப்படுகின்றன.
இந்தவகையில் கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வாழ்ந்து வரும் தமிழர்களின் தொன்மையினை எடுத்துக் காட்டும் புராதன கோவில்களுள் குறிப்பிடத்தக்கதாக மட்டுநகரின் அமிர்தகளியில் இருக்கின்ற மாமாங்கர் ஆலயம் உள்ளது.
இவ்வாலயத்தை 'மாமாங்கக் கோவில்', 'மாமாங்கேஸ்வரர் ஆலயம்', 'மாமாங்கப் பிள்ளையார் கோவில்' என்று மக்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.
மட்டக்களப்பின் அமிர்தகளி தீர்த்தக் குளத்தருகில் வெண்மணற் பரப்பில் விருட்சங்கள் நிறைந்த இயற்கை எழில் மிகுந்த சூழலில் இக்கோவில் கம்பீரமாகக் காட்சி தருகின்றது.

இக்கோவிலின் வரலாறு இராமாயாண இதிகாசத்துடனும், கிழக்கின் தென்பகுதியில் (உன்னாசகிரி) ஆட்சி செய்த பண்டைய அரசியான ஆடகசவுந்தரியின் வாழ்வியலுடனும் தொடர்புறுத்திச் சொல்லப்பட்டு வருகிறது.
காலத்திற்குக் காலம் கிழக்கிலங்கையில் வாழ்ந்த புலவர்களும், பண்டிதர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், புலமையாளர்களும் இவ்வாலயத்தைப் பற்றித் தமது எழுத்துகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதனூடாக, கிழக்கில் வாழ்ந்த மரபுவழி அறிஞர்களாலும், நவீன புலமையாளர்களாலும் விட்டுச்செல்ல முடியாத வகையில், கிழக்கிலங்கையில் வாழ்ந்து வருகின்ற மக்களின் வாழ்வியலுடன் மிகுந்த தொடர்புடைய பிரசித்தமான தொன்மை மிகுந்த கோவிலாக இது விளங்கி வந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
பௌதீக அளவில் பெரியதாக இருப்பதால் இது பேராலயமன்று, மாறாக கிழக்கிலங்கையின் மிகப்பழமையான ஆலயமாக இது காணப்படுவதன் காரணத்தாலேயே இது பேராலயம் என்று பொருள் கொள்ளப்படுகிறது எனலாம்.
இக்கோவிலின் தொன்மையினை எடுத்துக் காட்டும் கண்களால் பார்க்கத்தகுந்த ஆதாரமாக இவ்வாலயத்தின் மூலமூர்த்தியின் உருவமே உள்ளது என்பர்.
அதாவது மூல மூர்த்தியாகச் சிற்பிகளால் செதுக்கப்பட்ட விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ள கோவில்களின் வரலாற்றை உறுதியாகக் கூறிவிட முடியும், அதாவது விக்கிரகங்கள் உருவான வரலாற்றிலிருந்து அதன் வயதை அறுதியிட முடியும்.
ஆனால் புராதனப் பண்புகள் மிகுந்த கல்லினாலான சின்னங்கள், அடையாளங்கள், குறியீடுகள் முதலானவற்றை வழிபாட்டிற்குரிய மூலமாகக் கொள்ளும் கோவில்களின் வயதைத் தொன்மையான மனித வாழ்வுடனும் அவர்தம் வரலாற்றுடனுந் தொடர்புறுத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
இந்தவகையில் மாமாங்கர், மாமாங்கேஸ்வரர், மாமாங்கப் பிள்ளையார் என்று அடையாளப்படுத்தப்படும் மட்டக்களப்பு மாமாங்கக் கோவிலின் மூலமூர்த்தி இக்கோவிலின் புராதனத்தன்மையினைக் காட்டுந் தொன்மைமிகுந்த தெய்வமாகக் காட்சி தருகிறார்.
இதனாலேயே கிழக்கிலங்கையில் பரன்பரைகள் பல கடந்தும் தொடர்ச்சியாக வழிபடப்பட்டு வருகிறார்.
தொன்மையான தெய்வமாக மாமாங்கரைப் புரிந்து கொண்ட மட்டுநகர் வாழ் பல்வேறு மக்கள் சமூகத்தினரும் தத்தமக்கான, தாம் வாழும் ஊர்களுக்கான கோவில்களை அமைக்கும் போது மாமாங்கரைப் பெருந்தெய்வமாகக் கருத்திற்கொண்டு அதனை மீறாத விதத்தில் விழாக்களையும், கோவில் கட்டடங்களையும் உருவாக்கியுள்ளனர் என்பதையும் ஆய்ந்தறிய முடிகிறது.
கிழக்கிலங்கையின் தொன்மைக் கடவுளின் கோவிலான மாமாங்கம் வரலாற்றின் ஓட்டத்திற்கேற்ற விதத்தில் பல் பரிமாணங்களைப் பெற்று வந்துள்ளது என்பதையும் வரலாற்று ஆதாரங்களின் துணைக்கொண்டு அறியமுடிகிறது.
கிழக்கிலங்கையின் கரையோரப் பகுதிகளின் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்திய கிழக்கின் புராதன அரசியான ஆடகசவுந்தரியின் காலத்தில் இக்கோவில் செல்வாக்குப் பெற்றதாக இருந்துள்ளது.
ஆடகசவுந்தரியின் காலத்தில் இக்கோவிலின் குளத்துத் தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு அரசியின் ஆட்சி மையம் இருந்த திருக்கோயில் (உன்னாசகிரி) சமுத்திரத்தில் கலந்து ஆடியமாவாசைத் தீர்த்தத்தை ஆடியதாக மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறுகிறது.
மேற்படி மாமாங்கருடன் தொடர்புபட்ட ஆடகசவுந்தரியின் காலத்துக் கதை, தொன்மை மிகுந்த வழிபாட்டிடங்களில் பெருங்கோவில்களின் கட்டுருவாக்கங்கள் நடந்தேறிய தென்னாசிய சமூக, அரசியல், பண்பாட்டு வரலாறுகளுடன் அமிர்தகளி மாமாங்கக் கோவிலின் தொன்மையினையுந் தொடர்புறுத்திச் சொல்கிறது எனலாம்.
இன்றைய காலத்தில் ஆண்டுதோறும் மட்டக்களப்பில் வாழும் பல்லின மக்களும் பெரும்பாலும் ஒன்றுகூடும் இடமாக மாமாங்கரின் தீர்த்தக்கரைத் திருவிழா வெளி விளங்கி வருகிறது.
மட்டக்களப்பின் புவியியல் பரப்பின் மையப்பகுதியில் நகரையண்டியதாக இக்கோவில் இருப்பதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்வாறு இலங்கைத் தமிழரின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையினைக் காட்டும் மாமாங்கப் பேராலயம் அதன் வரலாற்றில் மற்றுமொரு மகா கும்பாபிஷேகத்தை இந்த 2025 ஆம் ஆண்டில் காண்கிறது.
நவீன கொங்கிறீட் கட்டிடத் தொழில் நுட்பத்துடனும், திராவிடக் கோவில் கட்டட சிற்பக் கலையம்சங்களுடனும், நான்கு வாயில்களிலும் கோபுரங்கள் கட்டப்பட்ட நிலையில் புனருத்தாரணஞ் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
நான்கு நாள்களுக்கு (ஜீன் 27,28,29,30) பொதுமக்கள் எண்ணை சாத்தி வழிபடும் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
வழமையாக பத்து நாள்களுக்கு விழாக் கோலங் காணும் அமிர்தகளி இந்த வருடம் மகா கும்பாபிஷேகம் காரணமாக ஒரு மாத காலத்திற்கு விழாக் கோலம் காண்கிறது.