நடனக்கலைஞர்களுக்கான இலங்கையின் மிகப் பெரிய மேடையாக உருவெடுத்து வரும் "இசைத்துள்ளல் 2025" ஆனது இளம் கலைஞர்களின் நடனத் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பதோடு, இந் நிகழ்வானது, கடந்த 24 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இசைத்துள்ளல் போட்டியின் தொடர்ச்சியாக, இம்முறை முதல் முறையாக இலங்கையை மையமாகக் கொண்டு "சுவிஸ் கலைமன்றத்தினூடாக" சோலோமூவீஸ் நிறுவனர் "வசி" முன்னெடுத்து நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொழும்பு ராயல் MAS அரீனாவில் நேற்றைய தினம் முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வு நிகழ்வில் பல நூற்றுக் கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர், இந்நிகழ்வுக்கு இந்திய பிரபல திரைப்பட நடன நெறியாள்கையாளர் ஷெரிப் மாஸ்டர் பிரதான நடுவராக கலந்து கொண்டிருந்ததோடு, 'தமிழ்நாட்டு கலைஞர்களுக்கு சமமாக இலங்கை கலைஞர்களும் தமது திறமைகளை இன, மொழி பேதமின்றி ஒற்றுமையாக வெளிப்படுத்துவது சிறப்பம்சமாகும்' என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மேலும், கடந்த 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் 'இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில்' நடைபெற்ற முதல் கட்ட தேர்வில், மொத்தமாக 198 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, இந்திய பிரபல நடன நெறியாள்கையாளர் ஷெரிப் மாஸ்டர், மற்றும் ஈழத்தின் திறமையான நடனாசிரியர்கள் அபிராமி, கிருஷ்ணகாந்தன் மாஸ்டர்கள் நடுவர்களாக பங்கேற்றிருந்தனர்.
"இசைத்துள்ளல் 2025" நிகழ்வின் மாபெரும் இறுதிச் சுற்றானது, யாழ் மற்றும் கொழும்பில் தேர்வான இறுதிப் போட்டியாளர்கள் இடையே எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதோடு, இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசும் சுவிட்சர்லாந்து நாட்டுக்கான பயண வாய்ப்பும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.