மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத கனிம அகழ்கள் குறித்த முறையான விசாரணையொன்றை முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மண்மாபியாக்கள் மற்றும் சட்ட விரோத கனிம அகழ்கள் குறித்த முறையான விசாரணையொன்றை முன்னெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கவனத்தில் கொண்டு உரிய விசாரணைக்குழுவினை நியமித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் இயற்கை வளம்கொண்ட மாவட்டமாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் பாரியளவில் கனிம வளங்கள் சுரண்டப்படும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றது.
2008ஆம் ஆண்டுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகாரத்திலிருந்த தமிழ் அரசியல்வாதிகளினால் தங்களது அடிவருடிகளைப்பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தின் மலை வளங்கள், மண் வளங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன.
குறிப்பாக மண் மாபியாக்கள் அரசியல் பின்புலம் மூலம் தோற்றம்பெற்றதுடன் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் மாவட்ட அரசியல்வாதிகளின் பின்னணியில் இவை தொடர்ச்சியாக இயங்கிவரும் நிலைமையிலேயே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தினைச்சேர்ந்த மக்கள் தமது தேவைகளுக்காக கனிம வளங்களை பெறமுடியாத நிலையில் இங்கிருந்து வேறு பகுதிகளுக்கு புகையிரம் மூலமும் வாகனங்கள் மூலமும் அதிகளவில் கொண்டுசெல்லும் நிலைமையே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் கனிமவள அகழ்வுகள் மற்றும் மலைகள் உடைக்கப்படுவது குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.அத்துடன் கனிமவள அகழ்வுகளை சரியான முறையில் அனுமதிகளை வழங்கி இந்த மாவட்ட மக்களும் குறைந்த விலையில்பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.
தொடர்;ச்சியாக இந்த மாவட்டத்தில் மாபியாக்களாக செயற்பட்டுவருவோர் கடந்த காலத்தில் அரசியல்வாதிகளை பயன்படுத்தி பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டோர் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.