அதனை முன்னிட்டு நேற்று 07.06.2024 திகதி வெள்ளிக்கிழமை தற்போதுள்ள மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து புதிய ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்படவுள்ள விநாயகப் பெருமானின் விக்கிரகம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு புதிய மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை சென்றடைந்ததும், கிரியாரம்பம், ஆச்சார்யவர்ணம், விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்ணியாக வாசனம், அனுஞ்ஞை, திரவிய பாக திரவிய பூஜை, பேரி தாடணம், நந்திக்கொடி ஏற்றம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சூரியாக்கினி, சங்கீரணம், அதிவாச கிரிகைகள் என்பன நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆகிய இன்று 08.06.2024 திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு விநாயகர் வழிபாடும், புண்ணியாக வாசனம், அதனைத் தொடர்ந்து யாக பூசை, விசேட திரவிய ஹோமம், தீபாராதனை, திருமுறைப் பாராயணம் மற்றும் காலைப் பூசை என்பன இடம்பெறவுள்ளதுடன் இன்றைய தினம் காலை 8.00 மணி முதல் விநாயகப் பெருமானுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு மாலை 4.00 மணி வரை இடம் பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை 09.06.2024 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், யாகசாலை பிரவேசம், யாக பூசை ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்திரா தானம், தூபி அபிஷேகம் என்பன இடம் பெற்று காலை 10.38 மணி முதல் 11.26 மணி வரையுள்ள சுபமுகுர்த்த வேளையில் மகா குப்பாபிஷேகம், தச மங்கள தர்சனம், மகா பிஷேகம், ஆச்சாரிய சம்பாவனை என்பன இடம்பெற்று அன்றைய தினம் அன்னதானமும் இடம்பெறவுள்ளது.
மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் தலைவியும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்ரினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகத்தின் ஏற்பாட்டில் ஆலய நிருவாக சபையினரின் ஒத்துழைப்புடன், கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.
கிரியா காலத்தில் பிரதிஸ்டா பிரதம குருவாக கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவரும், ஆரையம்பதி கந்த சுவாமி பேராலயத்தின் பிரதம குருவுமாகிய அகோரசிவாச்சாரியார் கிரியா கலாநிதி சிவஸ்ரீ.கணேச லோகநாதக் குருக்கள் தலைமையில் மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.உத்தம ஜெகதீஸ்வர குருக்கள் உள்ளிட்ட சிறப்புக் குருமார்களினால் கும்பாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் என்பன நடைபெற்று எதிர்வரும் 20.06.2024 திகதி சங்காபிஷேகம் இடம் பெறவுள்ளது.









