மட்டக்களப்பில் இலக்கிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்திய "தமிழர் பண்பாடும் செல்நெறிகளும்" பன்னாட்டு ஆய்வு மாநாடு!!


மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம், சென்னை செம்மூதாய் பதிப்பகம், .செம்புலம் ஆய்விதழ், அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் பிரான்ஸ் வள்ளலார் சன்மார்க சங்கம் ஆகிய இலக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய "தமிழர் பண்பாடும் செல்நெறிகளும்" பன்னாட்டு ஆய்வு மாநாடு வெள்ளிக்கிழமை (17) மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவரும், பன்னாட்டு மாநாட்டுத் தலைவரும், முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி முருகு. தயாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.முரளிதரன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆகியோரும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு.சதாசிவம், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி, அந்தமான் மேனாட்டுத் தலைமைப் பொறியியலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி,அநந்தமான் தமிழ் இலக்கிய மன்றச் செயலாளர் ஆர்.கோபாலன் மற்றும் பிரான்ஸ் வள்ளலாளர் சன்மார்க்க சங்கத் தலைவர் ஜெய. பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்பத்தில் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகள் அரங்கு,பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கு மற்றும் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அரங்கு ஆகியவற்றில் பல்வேறு தலைப்புக்களில் அறிஞர் பெருமக்களால் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதன்போது அதிதிகள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலாசாலையின் முன்றலிலிருந்து இந்னிய வாத்தியங்கள் முழங்க பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் வ.கனகசிங்கம் செம்புலல் ஆய்விதழினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.முரளிதரனுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து அதிதிகளுக்கான இதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்கள், அறிஞர்கள் 21 பேருக்கும், இந்திய நாட்டு அறிஞர்கள் 60 பேருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.