மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2024


மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2024 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் தலைமையில் ஈஸ்ரன் ஸ்ரார் மற்றும் எவகிறீன் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மதிராஜ் எற்பாட்டில் இடம் பெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யபட்ட பிரதேச சிறுவர் கழகங்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்காக மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட இப்போட்டிகளுக்கான அனுசரனையினை செரி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது சிறார்களிடையே புரிந்துணர்வு மற்றும் நல்லுரவை மேம்படுத்துவதற்காக கிரிக்கட் சுற்றுப் போட்டிகள், கிராமிய விளையாட்டுக்கள், இலங்கை இராணுவத்தின் 243 படைப்பிரிவினரினால் சுவாரசியமான விளையாட்டுக்கள் பல சிறார்களுக்காக இடம் பெற்றது.
மேலும் பெண்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இடம் பெற்றதுடன் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கோறளைப்பற்று பிரதேச சிறுவர் கழகத்திற்கும் கோறளைப்பற்று மேற்கு சிறுவர் கழகத்திற்கும் இடையில் இடம் பெற்ற போட்டியில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சிறுவர் கழகம் 53 ஒட்டங்களைப்பெற்று வெற்றி வாகை சூடியதுடன் கோறளைப்பற்று அணியினர் 28 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), இலங்கை இராணுவத்தின் 243 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, செரி நிறுவன தேசிய திட்ட முகாமையாளர் வி.இ.தர்ஷன், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார், மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத் என பலர் கலந்து கொண்டனர்.