சத்துருக்கொண்டானில் மனித மண்டையோடு எழும்புகள் மீட்பு


மட்டக்களப்பு, சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயதின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில், இனம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள்,  சனிக்கிழமை (04) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆற்றில்   மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவின் வலையில் மண்டை ஓடு மற்றும் இரு எலும்புக் கூடுகள் சிக்கியதையடுத்து அதனை கரைக்கு கொண்டுவந்தனர்.இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸ், தடவியல் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணையை முன்னெடுத்தபோது,  40 வயதுக்கு உட்பட்ட ஆண் ஒருவரின் மண்டை ஒடு என பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய தர்சினி சம்பவ இடத்துக்கு சென்று மண்டை ஓட்டை பார்வையிட்டு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து மீட்கப்பட்ட மண்டை ஓடு எலும்புகள் மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை. மீட்கப்பட்ட மண்டை ஒடு கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி காணாமல் போயுள்ள மனநலம் குன்றிய 28 வயதுடைய இளைஞனான பழைய பனிச்சையடியைச் சேர்ந்த  செல்வராசா நிதுஷன் என்பவரது மண்டை ஓடு என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதாகவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.