மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி


மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று மாலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் கே.தவேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பாடசாலையின் பழைய மாணவர்களின் அனுசரனையுன் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இங்கு வள்ளுவர், கம்பர் மற்றும் இளங்கோ என மூன்று இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் விளையாட்டுப் போட்டியின் போது அதிதிகள் பேண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, பாடசாலையின் கொடி மற்றும் இல்லங்களுக்கான கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுக்கள், ஏனைய பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுக்கள் வினோத, உடை போட்டி, பழைய மாணவர்களுக்கான அஞ்சலோட்டம், ஆசிரியர்களுக்கான போட்டிகள் மற்றும் பெற்றோர்களுக்கான போட்டிகள் என்பன இடம்பெற்றதுடன் உடற் கண்காட்சியும் மற்றும் சம்பா பேண்ட் கண்காட்சியும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி எட்டிய மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணமும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் இளங்கோ இல்லம் முதலாவது இடத்தையும், வள்ளுவர் இல்லம் இரண்டாம் இடத்தையும் மற்றும் கம்பர் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் இல்லங்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் பாடசாலையின் அதிபர் மற்றும் பழைய மாணவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.சிவலிங்கம், கிராம சேவையாளர்கள், மத தலைவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.