மயிலந்தனை படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!!


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மயிலந்தனை படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (09.08.2022) மயிலந்தனை விநாயகர் ஆலயத்தில் உரிய கிராம மக்களால் அனுஸ்டிக்கப்பட்டது.

இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நிதி கோரிய மகஜர் ஒன்றினையும் இலங்கை சனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

மேன்மைதகு ஜனாதிபதி இலங்கை,
ஜனநாயக சோசலிசக் குடியரசு,
இலங்கை.

நீதி மறுக்கப்பட்ட மயிலந்தனை மக்களின் நீதிக்கான கோரிக்கை

மட்டக்களப்பு நகருக்கு வடக்கே 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புனானை மயிலந்தனை கிராமத்தில் 09 ம் திகதி ஆவணி மாதம் 1992 ம் ஆண்டு எமது மயிலந்தனை கிராமத்தைச் சார்ந்த சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக 39 பேர் வெட்டியும், சுடப்பட்டும், கொலை செய்யப்பட்டார்கள். 34 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இன்றைய நாளில் 35 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

இதன் போது நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புனாணை இராணுவ முகாமைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினரே இப்படுகொலைகளை நிகழ்த்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு சித்திரை 2 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்று, 24 இராணுவத்தினர் உயிர் தப்பியோரினால் அடையாளம் காணப்பட்டனர்.

பின்னர் இவ்வழக்கு பொலன்னறுவை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்புக் கருதி சட்டமா அதிபர் இவ்வழக்கை கொழும்பு நீதிமன்றத்துக்கு மாற்றினார். இதனால் சாட்சிகள் கொழும்பு சென்று சாட்சி சொல்வதற்குப் பெரும் சிரமப்பட்டனர். 1993 புரட்டாதி மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மட்டக்களப்பிலிருந்து 30இற்கும் அதிகமான சாட்சிகள் விசாரணையில் கலந்து கொண்டனர். தீவிர விசாரணையின் பின்னர் தீர்ப்புக் கூறும் முடிவு ஜுரி குழுவுக்கு கொடுக்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எந்த ஒரு இராணுவத்தினரும் குற்றம் இழைக்கவில்லை என ஜுரி குழு ஏகமனதாகத் தீர்ப்பளித்தது. மீண்டும் இதனைப் பரிசீலிக்குமாறு நீதிபதி கேட்டுக் கொண்ட போதும், ஜுரி சபையினர் அவர்களைக் குற்றமற்றவர்கள் எனக் கூறினர். கொல்லப்பட்டவர்கள் சார்பாக மேன்முறையீடு செய்வதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட 18 இராணுவத்தினரும் நவம்பர் 27ஆம் திகதி 2002 விடுதலை செய்யப்பட்டனர். இத்தீர்ப்பினை அடுத்து மனித உரிமைக் குழுவும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும், கிராம மக்களும் இது குறித்து அதிருப்தியடைந்தோம்.

எனவே, மயிலந்தனை படுகொலை நடந்து இன்று 30ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மீளவும் நீதிக்காக தங்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

1. எமது வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஜுரி முறை விசாரணையை நாம் ஏற்க மறுக்கிறோம்.

2. சாட்சிகளுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

3. சாட்சிகளின் வழக்கு செலவை அரசு பொறுப்பேற்க வேண்டும்.

4. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

5. மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரச தரப்பு முன்னெடுப்புகளை அறிவித்தல் வேண்டும்.

மயிலந்தனை கிராம மக்கள்,
புனாணை, கிரான், மட்டக்களப்பு,
09 ஆவணி 2022.