மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருள்கள் அதிக விலையா? உடன் அழைக்கவும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பால்மா, சீமெந்து உட்பட பல்வேறு பொருள்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

பொருள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்த நிலையங்கள் தொடர்பில் 0652228810, 0770110096 மற்றும் 1977 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, தமக்கு தகவல்களை வழங்குமாறும் நுகர்வோர்களை அவர் கேட்டுள்ளார்.

நுகர்வோரின் நலன்கருதி, இவ்வாறான வியாபாரிகளை கண்டறிய தாம் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைகளை மீறி, கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.