மாணவர்கள் சரியான முறையில் தயார்படுத்திய பின்னரே பரீட்சைகள் நடாத்தப்படவேண்டும் -இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

அரசாங்கம் மாணவர்கள் கற்பதற்கான உரிய சூழலை ஏற்பத்திய பின்னரே கா.பொ.த.உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றினை நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சரியான திட்டத்தினை நடைமுறைப்படுத்தி மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகி அவர்கள் பரீட்சை எழுதுவதற்கு ஏற்ற சூழல் சரியான முறையில் கிடைத்த பின்னரே இந்த பரீட்சைகளை நடாத்தவேண்டும் என இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் வடகிழக்கு மாகாணங்களின் செயலாளர் ஜீவராஜா ருபேஷன் இதன்போது அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தார்.

இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த மாதம் 31ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவு பற்றி தெரிவிப்பதற்காக நேற்றைய தினம் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் கல்வி அமைச்சின் செயலாளர் அழைத்திருந்தார். இந்தக் கலந்துரையாடலிலே எங்களுடைய சம்பள முரண்பாடு பற்றி எந்தவொரு தீர்க்கமான கருத்துக்களும் பரிமாறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் நிதிஅமைச்சருடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து தரும்படி நாங்கள் ஒரு கோரிக்கையை வைத்தோம். அதனை ஏற்பாடு செய்து தருவதாக அவர் உறுதியளித்திருந்தார். 

போராட்ட நிலைமைகள் இவ்வாறு சென்றுகொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்திலே பதினொராம் மாதம் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கா.பொ.த.உயர்தரப்பரீட்சைகளை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றது. இந்தக்  காலகட்டத்தில் நிகழ்நிலைக் கல்வியினை நாற்பது வீதமான மாணவர்களே பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஏனைய அறுபது வீதமான மாணவர்களுக்கு இது கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் இந்த மாணவர்களுக்கு பரீட்சைக்குத் தயாராகுவதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்காமல் அரசங்கமானது பரீட்சைகளை நடத்துவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகின்றது.

சரியான திட்டத்தினை நடைமுறைப்படுத்தி மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகி அவர்கள் பரீட்சை எழுதுவதற்கு ஏற்ற சூழல் சரியான முறையில் கிடைத்த பின்னரே இந்த பரீட்சைகளை நடாத்தவேண்டும் என்கின்ற கோரிக்கையினை நாங்கள் இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கின்றோம்.

அரசாங்கம் 200மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளை திறக்கப்போவதாக அரசாங்கம் கூறுகின்றது.பாடசாலைகள் நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கின்றது.இவ்வாறான நிலையில் கற்றல்சூழலை ஏற்படுத்துவதற்கான எந்த திட்டமும் முன்வைக்கப்படாத நிலையிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு முறையும் முன்வைக்கப்படாத நிலையிலும் வெறுமனே பாடசாலைகளை ஆரம்பிக்கப்போகின்றோம் என்கின்ற வகையிலான கருத்துகளை மட்டுமே இவர்கள் கூறிவருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 200வீடுகளை கட்டுவதையும் அதிநவீன பாதைகளை அமைப்பதுபோன்ற கருத்துகளை விடுத்து மாணவர்களுக்கு உடனடியாக மாணவர்களுக்கான தடுப்பூசிகளைப்பெற்றுக்கொடுத்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி மாணவர்களுக்கான கல்வியினை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

நிகழ்நிலைக்கல்வியை ஆசிரியர்களே கொண்டுவந்தனர்.இதன்மூலம் 40வீதமான மாணவர்களே பயன்பெற்றனர்.ஏனைய 60வீதமானவர்களுக்கு அந்த கல்வி சென்றடையவில்லை.அந்த 60வீதமான மாணவர்களுக்கு சரியான வளங்களை வழங்கி அவர்களுக்கான கல்வியையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்தோம்.அரசாங்கம் அதனை ஏற்படுத்திக்கொடுக்காமல் ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தினால்தான் கல்வி நடவடிக்கை தடைப்பட்டதாக ஒரு போலியான கருத்தினை அரசாங்கம் தெரிவித்துவருகின்றது.