மாமாங்கம் விடுவிக்கப்பட்டது –வீதிகளுக்கு வந்த மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவு இன்று மாலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொவிட் அதிகரித்துச்செல்லும் நிலையில் அதிகளவான தொற்றாளர்கள் மாமாங்கம் பகுதியில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த 20தினங்களாக குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுவந்தது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறைந்தளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்தினை விடுவிப்பதற்கான பரிந்துரையினை தேசிய கொவிட் செயலணிக்கு மாவட்ட கொவிட் செயலணி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் இன்று மாலை முதல் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மாமாங்கம் பிரதேசம் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பிரதேசத்தில் அதிகளவானோர் வீதிகளில் குவிந்து நிற்பதை காணமுடிந்தது.

வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதையும் காணமுடிகின்றது.

சிலர் வீதிகளில் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சி ஆரவாரத்தினை வெளிப்படுத்தியதையும் காணமுடிந்தது.

எனினும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்காவிட்டால் குறித்த பகுதி மீண்டும் முடக்கல் நிலைக்கு செல்லவேண்டிய நிலையும் ஏற்படலாம் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.