ஒரு இலட்சம்வேலைவாய்ப்புக்காக மட்டக்களப்பில் அமைச்சரால் 20ஆயிரம் பெறப்பட்டதாக கருணா அம்மான் குற்றச்சாட்டு


ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்பது ஜனாதிபதியினால் சிறந்த திட்டமிடலுடன் கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.ஆனால் தற்போது அதில் பாரிய ஊழல்கள் நடைபெறுகின்றன.மட்டக்களப்பில் இருக்கும் அமைச்சர் ஆவனம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபா பணம் வாங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதமரின் விசேட இணைப்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு-அம்பாறை எல்லைக்கிராமமாக வேப்பையடியில் பிரதமரின் விசேட இணைப்பாளரின் அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான அலுவலகமாக வெல்லாவெளி-நாவிதன்வெளி பிரதான வீதியில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதமரின் விசேட இணைப்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

வேப்பையடி செல்வவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து முரளிதரனால் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் விக்னேஸ்வரன்,பிரத்தியேக செயலாளர் சிவா மற்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அமைப்பாளர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் நீண்டகாலமாக ஏமாற்றிக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை விரட்டியடித்து நாங்கள் தனித்துவத்தினை இந்த அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கியுள்ளோம்.இதற்காக எமது கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக உழைத்தார்கள்.கல்முனை தொகுதி மக்கள் 89வீதமானவர்கள் எங்களுக்கு வாக்களித்திருந்தனர்.அதனை பிரதமர் மகிந்தராஜபக்ஸ பார்த்து பெருமையாக கூறினார்.

மக்கள் பிரதிநிதி வாய்ப்பை இழந்தாலும் மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பினை மகிந்த ராஜபக்ஸ ஏற்படுத்திதந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் எனக்கு வாக்களித்திருக்கின்றார்கள், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு எனக்கு ஒரு அதிகாரம் வேண்டுமென மகிந்த ராஜபக்ச அவர்களிடம் நான் கேட்டிருந்தேன். அப்போது அவர் அம்பாறை மாவட்டம் மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தையும் சேர்த்துத் தருகின்றேன், இரண்டு பிரதேசங்களிலும் என்னுடைய நிர்வாகப் பணிகளை கவனித்து அதனூடாக அம்மக்களுக்கு சேவையாற்றுமாறு கூறி இரண்டு மாவட்டங்களையும் தந்துள்ளார். இது சிறந்தவொரு அதிகாரமாகும். இதனை பயன்படுத்தி மென்மேலும் நிறைய மாற்றங்களை நாங்கள் கொண்டுவருவோம். 

என்னை வெகுநாட்களாக காணமுடியவில்லையென பலர் கூறி வருகின்றனர். எந்தவித அதிகாரமும் இன்றி உங்களை வெறுமனே சந்தித்து செல்வதால் எந்தப் பயனுமில்லை. அதனால்தான் தாமதம் ஏற்பட்டது. எங்களுக்கு தேர்தல் நோக்கமல்ல. இங்கிருக்கின்ற மக்களின் துன்ப துயரங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கின்றது.எங்களுடைய நிர்வாக அமைப்புகளாக இருக்கலாம்,பிரதேச செயலகமாக இருக்கலாம், மாவட்ட செயலகமாக இருக்கலாம் அனைத்து இடங்களிலும் அதிகாரம் செலுத்தக்கூடிய அதிகாரம் மிக்க பதவியொன்றை பிரதமர் அவர்கள் எனக்கு தந்திருக்கின்றார்.எமது மக்களின் தேவைகளை பூர்த்தியாக்கவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக இன்று அனைத்து செயற்பாடுகளும் மந்தகதியில் சென்றுகொண்டிருக்கின்றது.கொரனா முடிவுக்கு வரும்பொது எமது தேவையினை விரைவில் நிறைவுசெய்துகொள்ளமுடியும்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை.தோல்வியடைந்த கலையரசனுக்கு பதவி வழங்கியுள்ளனர்.அவர் வாகன பவனியில் திரிகின்றார்.அவர் ஒரு வேலைத்திட்டம் செய்தார் என்றால் நான் இந்த அம்பாறையினை விட்டுசென்றுவிடுவேன்.அவரால் எதனையும் செய்யமுடியாது.மக்களை ஏமாற்றுவதற்கும்,மீண்டும் தக்கவைப்பதற்குமான நடவடிக்கைகளையே அவர்கள் செய்துள்ளனர்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.கலையரசனுக்கு பதவி வழங்கியதனால் செயலாளரின் பதவி பறிபோயிவிட்டது.தலைமைப்பதவியில் பிரச்சினை.இவ்வாறு அம்பாறையில் இருந்தே நாங்கள் ஆட்டங்காணவைத்துள்ளோம். 

அம்பாறை மாவட்டத்தில் செய்த செயற்பாடே இன்று வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவினை சந்தித்தது. அவர்கள் அதனை உணர்ந்துகொண்டு எதிர்காலத்தில் செயற்படவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும்.அதனையே நாங்கள் வரவேற்கின்றோம்.தமிழர்களுக்குள் வரும் ஒற்றுமையே முக்கியமாகும்.

குறிப்பாக வரும்காலத்தில் நாங்கள் எந்த தேர்தலை சந்தித்தாலும் ஒரே சின்னத்தில் சந்தித்ததாக இருக்கவேண்டும்.அது தொடர்பில் மக்களையும் அரசியல் தலைவர்களையும் விழிப்படையவைக்கவேண்டும்.அவ்வாறு இருக்கும்போதுதான் அம்பாறை மாவட்டத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்கமுடியும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை எமது பிரதான பிரச்சினையாகும்.இரண்டு முறை பிரதமரை சந்தித்தபோது இது தொடர்பில் உரையாடியுள்ளேன்.அதற்கான துறைசார்ந்த அமைச்சராக சரத் வீரசேகர இருக்கின்றார்.அவர் வருவதாக கூறியிருந்தார்.கொரனா பிரச்சினை காரணமாக வரமுடியவில்லை.இந்த பிரச்சினைகள் நீங்கியதும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதே எமது பிரதான வேலையாக இருக்கும்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்பது ஜனாதிபதியினால் சிறந்த திட்டமிடலுடன் கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.ஆனால் தற்போது அதில் பாரிய ஊழல்கள் நடைபெறுகின்றன.மட்டக்களப்பில் இருக்கும் அமைச்சர் ஆவனம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபா பணம் வாங்கியுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் சொந்த வாகனம் வைத்துள்ளவருக்கு அந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்தளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றேன்.