நான்காவது ஆசனத்தை பெறக்கூடிய வல்லமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே உள்ளது ஞா. ஸ்ரீநேசன்


மட்டக்களப்பு தேர்தல் மாவட்டதில் நான்காவது ஆசனத்தை பெறக்கூடிய வல்லமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை (01) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.

இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதற்காக பல தேசியக் கட்சிகளும், அவர்களின் முகவர்களாக சுயேட்சைக் குழுக்களும் இறங்கி உள்ளன.

இவர்களின் நோக்கம் இத் தேர்தலில் வெற்றி பெறுவதோ அல்லது ஆசனங்களை பெற்றுக் கொள்வதோ அல்ல. வெறுமனே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதரடிப்பதே ஆகும். இவர்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் எமது மக்கள் நல்ல பாடம் கற்றுக்கொடுத்தே வருகிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை நான்கு ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும். அதற்குரிய மக்கள் ஆணையும், வல்லமையும் எமக்கு உள்ளது. இந்த ஆசன எண்ணிக்கையை குறைத்து வேறு ஒரு சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பல முகவர்கள் இறங்கியுள்ளார்கள். அவர்களால் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் சிங்கள மக்கள்,  தமிழ் கட்சிகளுக்கோ முஸ்லிம் கட்சிகளுக்கோ வாக்களிப்பதில்லை. அதுபோல முஸ்லிம் மக்களும் சிங்கள கட்சிகளுக்கோ, தமிழ் கட்சிகளுக்கோ வாக்களிப்பது இல்லை. இதை உணர்ந்து தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும். எனவும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மன்முனை பிரதேச சபையின் தவிசாளர் சண்முகராசா, வாலிபர் முன்னனியின் வட கிழக்கு தலைவர் கி. சேயோன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பொது மக்களின் அமோக ஆதரவுக்கு மத்தியில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நிகழ்வின் இறுதியில் ஆதரவாளர்கள் கேக் வெட்டி தமது அன்பிணை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.