மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீராவோடை மற்றும் மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.
சர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் அஜானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குறித்த பிரதேசங்களின் கிராம சேவையாளர்கள்,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், இளம் பெண்ணிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இன ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையிலும் அமைதியான முறையில் ஒற்றுமையுடன் வாழும் சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இதன்போது மீராவோடை, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் தமது வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் வகையில் முன்னெடுக்கும் தொழில் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில் 15 பெண்களுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
அத்துடன் மாஞ்சோலை பகுதியில் பாடசாலை இடைவிலகளை தடுக்கும் வகையில் வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட 14 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.