வட்டிக்கு கொடுத்து பல பெண்கள் தற்கொலைக்கு காரணமான வேட்பாளர்கள் - குற்றஞ்சாட்டும் கருணா அம்மான்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளவர்களில் பலர் வட்டிக்கு காசுகொடுத்து அவர்களினால் பல பெண்கள் தற்கொலைசெய்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு,கல்லடியில் நடைபெற்றது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

திருமதி வித்தியாபதி முரளிதரன் தலைமையில் எட்டு வேட்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த முரளிதரன்,

கடந்த முறை அமைச்சராக இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றேன்.அதற்கு நன்றியுடைய மக்களாக எமது தையல் மெசின் சின்னத்திற்கும் எமது வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றிபெறச்செய்யவேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் நான் கப்பல் சின்னத்தில் போட்டியிடுகின்றேன்.இன்று அம்பாறை மாவட்டத்தில் அனைத்து தமிழர்களும் என்பின்னால் அணி திரண்டுள்ளனர்.அங்கு நான் வெல்லப்போவது உறுதியான விடயம்.அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் எமது பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதன் மூலமே தொடரான அபிவிருத்தியைபெறமுடியும்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை 50கோடி ரூபா செலவில் என்னால் கட்டிக்கொடுக்கப்பட்டது.அதேபோன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள புற்றுநோய் வைத்தியசாலை ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபாவினை கொண்டுவந்து கட்டிக்கொடுத்தோம்.அதேபோன்று மண்முனைபாலம்,பல குளங்கள் புனரமைப்பு,விவசாயிகளுக்கான நீர்பாசன வசதிகள் என பல திட்டங்கள் செய்துள்ளேன்.இதனை புரிந்துகொண்டு மக்கள் செயற்படவேண்டும்.

அதனைவிடுத்து நீங்கள் தேவையற்றவர்களுக்கு வாக்களிப்பீர்களானால் உங்கள் வளங்களை இழக்கும் நிலையேற்படும்.கோத்தா,மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் 20வருடங்களுக்கு மேல் நிலைத்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது.இன்று எதிர்க்கட்சியே இல்லாத நிலையேற்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இதில் அரசுடன் பலமிக்கவர்கள் யார் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த மாகாணசபையில் முஸ்லிம்களிடம் கொண்டு தமிழர்களை அடகுவைத்தார்கள்.இவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதுவித அபிவிருத்திகளும் முன்னெடுக்கமுடியாது. அன்றைய காலகட்டத்தில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இதற்கு எதிராக குரல்கொடுக்கவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளவர்களில் பலர் வட்டிக்கு காசுகொடுத்து அவர்களினால் பல பெண்கள் தற்கொலைசெய்துள்ளனர்.வெள்ளிமலை ஒரு மாதத்தில் ஐந்து கட்சிக்கு பாய்வார்.சரீரம் யோகேஸ்பரன் 24வீதம் வட்டிக்கு கொடுத்து பல பெண்களின் வாழ்க்கையினை இல்லாமல்செய்தவர்.அடுத்ததாக வட்டி வாணிதாசன் என்ற ஒருவர்.இவரை மட்டக்களப்பு மக்களுக்கு தெரியாது.இவ்வாறானவர்கள் வந்து மக்களுக்கு என்ன சேவையாற்றப்போகின்றார்கள்.

வியாழேந்திரனைப்பற்றி நான் சொல்லத்தேவையில்லை.இதேபோன்று எங்களுடன் இருந்தவர் ஒரு இரவில் பாய்ந்துசென்றுவிட்டார்.இவரும் வெள்ளிமலையும் ஒரு இனத்தை சேர்ந்தவர்கள்.இவ்வாறானவர்களை தெரிவுசெய்தால் தமிழ் சமூகம் பாரிய விளைவுகளை எதிர்கொள்ளும்.

கடந்த காலத்தில் நாங்கள் அரசாங்கத்தில் இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழைத்துப்பேசுவதற்கு மகிந்தராஜபக்ஸ பல தடைவ முயற்சிகளை முன்னெடுத்தார்.அவர்கள் முன்வரவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது ஒரு தளர்ந்துபோன கூட்டமைப்பாகவே உள்ளது.அவர்கள் கொழும்புசென்றால் ஒருவிதமான அறிக்கைவரும் முல்லைதீவு சென்றால் அங்கிருந்து ஓரு அறிக்கைவரும்.