மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவு தினம்

இலங்கையில் கோரத்தாண்டவத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட ஆழிப்பேரலையேற்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.

இதனைமுன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று காலை பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழிப்பேரலை காரணமாக அதிக உயிரிழப்பினை எதிர்கொண்ட மட்டக்களப்பு திருச்செந்தூர் பகுதியில் உள்ள சுனாமி நினைவுத்தூபியில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வூர்வமாக நடைபெற்றது.

சுனாமி பேரனர்த்தம் காரணமாக இப்பகுதியில் 243 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் வழிபாடுகள் நடாத்தப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுத்தூபியில் சுடர் ஏற்றப்பட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்று காலை திருச்செந்தூர்,நாவலடி பகுதிகளில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.