ஊடகவியலாளர் மீதான அடக்கு முறைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஊடக அடக்குமுறை மற்றும் ஊழல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரி மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து, வெளியேறு வெளியேறு ஊடக சுதந்திரத்தை மிதிக்கும் அரச அதிகாரியே வெளியேறு, அரச அதிகாரிகளே ஊடகவியலாளர்களை அடக்க நினைக்காதே போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்கள் ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளருமான செ.நிலாந்தன் மீது போலியான அரச ஆவனங்களை பயன்படுத்தி போலியான செய்திகளை வெளியிட்டுவருவது தொடர்பில் முறையான விசாரணைசெய்யுமாறு கோரியும் பிரதேச செயலாளர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை அரசாங்க விசாரணை செய்யவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள் பெண்கள் அமைப்புகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் , மட்டகளப்பு மாவட்ட பொதுஜென பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் மற்றும் பொது மக்கள்,என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரயநேத்திரன் , மட்டகளப்பு மாவட்ட பொதுஜென பெரமுன அமைப்பாளர் ப.சந்திரகுமார் ஆகியோரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

குறித்த மகஜரில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்ந்துகொண்டே உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசு மாறினாலும் நிர்வாகத்தில் உள்ளவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

அரச உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் பாதுகாப்பு தரப்பையும், சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தி தங்களுக்கு எதிராக வெளிவரும் ஊழல் குற்றச்சாட்டுகளை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதாகவும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை கேவலப்படுத்துவ தாகவும் அமைந்துள்ளது.

தற்போது செங்கலடி பிரதேச செயலாளராக இருக்கும் ந.வில்வரெட்ணம் அவர்கள் மாவட்டத்தில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவராகவும் முகப்புத்தகங்கள், இணையத்தளங்களில் பிரதேச செயலாளரின் ஊழல்கள் குறித்து கருத்துக்களை பதிவு செய்த பலரை பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக கடந்த 14 வருடங்களாக செயற்பட்டு வருபவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளருமாகிய செ.நிலாந்தன் மீது ஏறாவூர் பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதோடு அதனை நியாயப்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு போலியான செய்திகளை வெளியிட்டு வருகின்றார். இது புதிய அரசாங்கம் உடனடி விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த 26.02.2019 அன்று செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களினால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தன் மீது முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டு அதன் படி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இணைய ஊடகங்களில் பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களுக்கு எதிராக செய்திகளை பிரசுரித்தமைக்கு எதிராகவே அந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்த முறைப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட ஊடகவியலாளருக்கு இன்று வரை எந்தவிதமான எழுத்துமூல அறிவித்தலையோ, அழைப்பாணையையோ பொலீசார் வழங்கவில்லை. அத்தோடு குறித்த ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் எதனையும் பெறாது ஏறாவூர் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 13 ம் திகதி திடிரென்று தொலைபேசியில் அழைப்பு விடுத்த ஏறாவூர் பொலிஸார் ஊடகவியலாளர் நிலாந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஒரு ஊடகத்தில் செய்தி வெளியானால் அந்த செய்தி தொடர்பாக செய்தியை வெளியிட்ட ஊடகம் மீதே வழக்கு தொடுக்க முடியும் ஆனால் ஊடகங்களில் வெளியான அநாமதேய செய்திகளுக்காக ஊடகவியலாளர் ஒருவரை கொலைக் குற்றவாளி போல் அச்சுறுத்துவது எந்த சட்டத்தின் படி நடைபெறுகிறது என்று தெரியவில்லை.

இதைவிட ஊடகவியலாளர் மீதான வழக்கு தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியானவுடன் செங்கலடி பிரதேச செயலாளர் முன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதோடு ஐந்து வருடங்களுக்கு முன் காலாவதியான அரச திணைக்கள இலட்சினைகள் பொறிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை தூசி தட்டி எடுத்து அதில் உள்ள ஆண்டு மாதம் திகதி என்பவற்றை அழித்து அதனை ஊடகங்களில் வெளியிட்டு ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்களின் ஊடக செயற்பாட்டிற்கும், அவரது கருத்து சுதந்திரத்திற்கும், அவரது தனிப்பட்ட கௌரவத்திற்கும், குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் விடும் வகையில் செயற்பட்டுள்ளார்.

அத்துடன் அவரது தனிப்பட்ட கௌரவத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு போலியான கருத்துக்களையும் ஆவணத்தையும் வழங்கி உள்ளார்.

இதைவிட மாவட்டத்தில் 14 வருடங்கள் ஊடகவியலாளராக பணியாற்றிவரும் ஒருவரை தனக்கு தெரியாது என்றும் அவர் ஒரு ஊடகவியலாளர் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்துள்ளார்.

பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களின் இதுபோன்ற மோசடியான போலியான சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது.

ஊடகவியலாளர் குறித்து போலியான செய்திகளை அரசாங்க அதிபரின் அனுமதி இன்றி வெளியிட்டமை தொடர்பாக பிரதேச செயலாளரை அரசாங்கம் விசாரணை செய்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.

அத்துடன் குறித்த பிரதேச செயலாளர் குறித்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இவருக்கு எதிராக நிலுவையில் உள்ள விசாரணைகள், செங்கலடி பிரதேசத்தில் இவரது காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணைகள் நடாத்தப்பட்டு உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். என புதிய அரசாங்க பிரதிநிதிகள் ஊடக உள்நாட்டலுவல்கள் அமைச்சிக்கும், கௌரவ ஜனாதிபதி,கௌரவ பிரதமர், மற்றும் பொலீஸ் மா அதிபர் ஆகியோருக்கு இந்த கோரிக்கை விடுக்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.