வியாளேந்திரணை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் சாணக்கியன்!

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் முடிந்தால் தனது சொத்து விபரங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் சவால் விடுத்துள்ளார்.


மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்
கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தவன் என்ற வகையில் கூட்டத்திற்கு வரும் மக்கள் எல்லாம் கோட்டபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.


கடந்த தேர்தல்களில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக என்னால் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு வந்தவர்கள் உண்மையாக வாக்களித்திருந்தால் அன்று மகிந்த ராஜபக்சவே வெற்றி பெற்றிருக்க வேண்டும் ஏனெனில் அவ்வளவு மக்கள் தொகை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர் எனவே கூட்டத்தை வைத்து தேர்தல் வெற்றியை தீர்மானிக்க முடியாது.

அடுத்தது கிழக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவோம் என்று கூறுகின்றவர்களிடம் கேட்கிறேன். 2014 ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஏன் மீண்டும் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்காது திருகோணமலையை சேர்ந்த நஜிப்பிற்கு முதலமைச்சர் பதவியை மகிந்த அரசு கொடுத்தது.


அன்று எங்கு போனது இந்த தமிழர்கள் மீதான அக்கறை. எனவே தமிழர்களுக்கு முதலமைச்சர் பதவி கொடுப்போம் ஆளுநர் பதவி கொடுப்போம் என்பது எல்லாம் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சொல்லப்படும் பொய்யான வாக்குறுதிகள்.

இதைவிட கோட்டபாய ராஜபக்சவுக்கு மட்டக்களப்பில் 13 கட்சிகள் ஆதரவு  தெரிவித்துள்ளதாக கூறுகிறார்கள். இதில் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை தவிர அரசியலில் எந்த ஒரு பதவியும் இல்லாத திரிவீல் கட்சிகள்தான் கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


அவர்களுக்கு மக்களிடம் எந்த ஆதரவும் இல்லை.
பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் குறித்தும் அவரது சொத்து விபரங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு. அவரது வீடு,காணி, வாகனங்கள் மற்றும் ஏனைய சொத்து விபரங்களுடன் என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருவாறாக இருந்ததால் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளேன்.

ஒரு ஆசிரியராக இருக்கும் வியாளேந்திரன் தனது மாணவர்களை தவறாக வழிநடத்துவதுடன் அவர்களை அரசியலுக்கும் பயன்படுத்துகின்றார். என்னை விட அரசியலில் குறைந்த அனுபவம் கொண்ட வியாளேந்திரன் தனது சொத்து விபரங்களுடன் முடியுமாக இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றேன் என்றார்.