உத்தியோகபூர்வ அழைப்புக்கமையவே ஜனாதிபதி பதவியேற்பில் பங்கேற்பு - ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (18) உத்தியோகபூர்வமாக பதவியேற்றிருந்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமையவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார் - என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்விலிருந்து கலாநிதி ஹிஸ்புல்லாஹ் வெளியேற்றப்பட்டதாக சமூக வலயத்தளங்களில் உண்மைக்கு புறம்பான போலி செய்தியொன்று பரப்பப்பட்டு வருகின்றது. 

இது தொடர்பில் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
“ ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய இன்றைய தினம் (18) அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டிருந்தார்.

அவர் மேற்படி நிகழ்வுக்கு உற்செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றினை வைத்து போலியான செய்தியொன்று சமூக வலயத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். 

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கே மக்கள் எதிர்பினை வெளியிட்டார்கள். மாறாக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை மிகவும் மரியாதையுடன் - நாகரீகமாக வரவேற்றிருந்தனர். – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.