அதிகாரவெறி பிடித்தவர்களிடம் இருந்து கிழக்கை மீட்போம் -பொதுச்செயலாளர் பிரசாந்தன்

அதிகார வெறிபிடித்த வர்க்கத்திடம் இருந்து கிழக்கினை மீட்பதற்கு தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பயணிக்கும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தின் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கினை மீட்பதற்கான தமது கோரிக்கைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நல்லாட்சியின் மீது கொண்ட வெறுப்புக்காரணமாக கோத்தபாயவுக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கியுள்ள மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் பதவி விலகி உடனடியாக பாராளுமன்ற தேர்தல் ஒன்று நடாத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் அரசாங்கமாக இருந்தால் வழிவிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்லவேண்டும்.

தமது கட்சிக்கு ஓரளவு வாக்கு சரிவு உள்ளது.அதனை எதிர்காலத்தில் சரிசெய்து தொடர்ந்து பயணிக்க எமது கட்சி தயாராகியுள்ளது.இந்த ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் எமது கட்சி வன்முறையில் ஈடுபடப்போவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டது.ஆனால் இந்த தேர்தல் மூலம் யார் வன்முறையாளர்கள்,யார் ஜனநாயகவாதிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் பாரிய எந்தவித வன்முறைகளும் அற்ற தேர்தலாக நடைபெற்றுள்ளது.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஜனநாயகத்தின் மீதுகொண்ட நம்பிக்கையினை மீண்டும் நிரூபித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் தனது வாக்கு வங்கியை இழந்துள்ளதாகவும் முஸ்லிம் மக்களே அதிகளவில் சஜித்திற்கு வாக்களித்திருந்ததாகவும் இங்கு பிரசாந்தன் தெரிவித்தார்.