சர்வதேச இதய மீளியக்க தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

சர்வதேச இதய மீளியக்க தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு இன்று மக்களின் சுகாதாரத்தினை முன்னிறுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் இலங்கை மயக்கமருந்தியல் மற்றும் அதிதீவிர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் கல்லூரியும் இணைந்து நடாத்தும் சர்வதேச இதய மீளியக்க தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

சர்வதேச இதய மீளியக்க தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு காந்திபூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.

மயக்கமருந்தியல் வைத்திய நிபுணர் டாக்டர் மதனழகனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் திருமதி க.கலாராணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதய நிறுத்தம் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

திடீர் என ஒருவருக்கு இதய நிறுத்தம் ஏற்படும்போது அங்குள்ளவர்கள் மேற்கொள்ளவேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்ததான பயிற்சிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.