நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிக்குவின் உடலை எரித்தமைக்கு மாநகரசபையில் கண்டனம்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 24 ஆவது அமர்வானது நேற்றைய தினம் (03.10.2019) மாநகர பதில் முதல்வரும், பிரதி முதல்வருமான க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு  உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

மேலும் சீனித்தம்பி ஜெயந்திரகுமாரால்  “நாவலடி வாழ் பொது மக்கள் அனர்த்தம் ஒன்று ஏற்படுகையில் விரைவாக அங்கிருந்து வெளியேறி கல்லடிப் பாலத்தை அடைவதற்காக ஆற்றங்கரை ஓரமாக வீதி ஒன்றை அமைப்பது ” தொடர்பான பிரேரணையும் முன்வைக்கப்பட்டு சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன்  அவர்களால் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டத்திற்கு முரணாக வகையில் விகாரை ஒன்றினை அமைத்தமை மற்றும் நீதி மன்றத் தீர்ப்பையும் மீறி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரை ஓரமான மரணித்த விகாராதிபதியின் உடலை தகனம் செய்தமைக்கான கண்டனத்தையும், அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கொண்டுவரப்பட்ட தீர்மானமும்  “கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பொலன்நறுவை புகையிரத நிலையம் வரை செயற்படுத்தப்படுகின்ற “புலதிசி” அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையை மட்டக்களப்பு புகையிரத நிலையம் வரை நீடித்து செயற்படுத்தல்” தொடர்பான பிரேரணைகளும் சபையில்  நிறைவேற்றப்பட்டன.