“உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்களுக்காக”

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பலியானோரை நினைவுகூரும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

“உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்களுக்காக” என்னும் தலைப்பில் அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் உறுப்பினர்களினால் சிறப்பான முறையில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,எஸ்.வியாழேந்திரன்,மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,குண்டுத்தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொன் உட்பட இந்து,பௌத்த,கிறிஸ்தவ மதத்தலைவர்கள்,இளைஞர்கள்,மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு படையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சீயோன் தேவாலயம் உட்பட இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவுப்பேருரைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு உயிர்நீர்த்தவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

இந்த நாட்டில் தீவிரவாதத்தினை அடக்குவதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.