வேடர் குடியிருப்பில் குண்டுவெடிப்பு –பல்வேறு கோணங்களில் விசாரணை

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா வேடர் குடியிருப்பு பகுதியிலுள்ள வெற்றுக் காணியொன்றில், குண்டுவெடிச் சம்பவமொன்று இடம்பெற்றது தொடர்பிலான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் நடைபெற்றுவருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (16) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து காணி உரிமையாளர், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில், நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, காத்தான்குடி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இன்று (18) குறித்த இடத்துக்குச் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இனந்தெரியாதோரால் மோட்டார் சைக்கிளொன்றில் குண்டு வைக்கப்பட்டு, இக்காணியில் வெடிக்கச் செய்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் இக்காணியின் சுற்று வேலி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.