கிழக்குப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழிற்சந்தை நிகழ்வு

இலங்கையின் பிரதான பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் இளைஞர்களின் வேலையின்மை இன்று எல்லாராலும் சிலாகிக்கப்படுகின்றது. நாட்டில் 4.2 விகிதத்தினர் வேலையில்லாமல் இருப்பதாகவும் அதிலும் இளைஞர்கள் 50 சதவிகிதமாக உள்ளதாகவும் தரவு சொல்லுகின்றது. இந்த பிரச்சினைக்கு பிரதான காரணமாக இளைஞர்களிடையே காணப்படும் குறைந்தளவான விழிப்புணர்வும், தனியார் மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான குறைந்தளவான பங்குபற்றல், வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை கொடுப்பவர்களுக்கிடையேயான தொடர்பின்மை போன்றவை காணப்படுகின்றன.

இந்த சவால்களை முறியடிக்கும்வண்ணம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சில் அமைந்துள்ள இஙங்கை தேசிய மனிதவளங்கள் அபிவிருத்திச்சபை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் யுவிஎல் இன் ஒத்துளைப்புடன் இப்பல்கலைக்கழகத்தில் முதலாவது “மாபெரும் தொழிற்சந்தையும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கினையும்” 28.02.2019 அன்று ஒழுங்கு செய்திருந்தது. இதில் சுமார் 2,000 பங்குபற்றுனர்கள் கலந்துகொண்டிருந்தனர். அங்கு 20 துறைசார் கம்பனிகளும் 18 கல்வி நிறுவனங்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு மனிதவலு மற்றும் தொழில் திணைக்களம், யூலீட், வெரண்டினா, அவுஸ்த்திரேலியா எயிட் நிறுவனம், மட்டக்களப்பு மாவட்ட விவசாய கைத்தொழில் வர்த்தக சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து இத்திட்டத்தினை சிறுப்புற நடாத்த அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் “தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு” காலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் “தகமைகள் அடங்கிய தரவுவேற்று மையம்” பேராசிரியரும் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமாகிய எப்.சி.ராகல் மற்றும் சிரேஸ்ட்ட விரிவுரையாளரும் யுவிஎல் பணிப்பாளருமாகிய கலாநிதி ஏ.அன்ரு அவர்களினாலும் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதனை தொடந்து, அவர் உரையாற்றுகையில். இந்த நிகழ்வு இப்பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக் நடைபெறுவதையிட்டு இவற்றை ஒழுங்கு செய்த அனைவருக்கும் பல்கலைக்கழகம் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

இவற்றைத்தொடந்து இந்த நிகழ்வின் நோக்கம் பற்றி இந்நிகழ்வுக்கு பொறுப்பாக அமைச்சில் இருந்து வருகைதந்த உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் அவர்கள் எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து, விரிவுரையாளர் ச.சசிதரன் அவர்கள் மாணவர்களை வழிகாட்டும் வண்ணம் “ஆற்றுப்படுத்தல் நிகழ்வினை” தொடர்ந்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதான தொழில் தருனர்கள் மற்றும் கல்வி சார் பிரதிநிதிகளின் சுருக்கமான “தொழில் சந்தை நிலவர கலந்துரையாடலை” மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் சி.தணிகசீலன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இவை அனைத்தும் நிறைவுபெற்றதும், அமைச்சின் ஆய்வு உத்தியோகத்தரும் திட்டப் பொறுப்பாளருமான த.செந்தில்நாதன் அவர்களின் நன்றியுரையினைத் தொடர்ந்து அதிதிகள் “தொழில் சந்தை திறப்பு விழாவினை” மிகச்சிறப்பாக சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்தனர். இதில் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், கலாநிதி ஏ.அன்ரு, சிரேஸ்ட்ட விரிவுரையாளர் சு.ஜெயப்பிரபா, பதிவாளர், பல்கலைக்கழக பொருளாளர் இவர்களுடன் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வினை தொடர்ந்து மாணவர்களின் தொழிற்சந்தைக்கான திறனை பரிசீலிக்கும் “சைக்கோமற்றிக் பரீட்சையும்” அதனுடன் கூடிய ஆற்றுப்படுத்தல் நிகழ்வும் யூலீட் நிறுவன அனுசரனையுடன் பல்கலைக்கழக கணணிக்கூடத்தில் ஒழுங்குசெய்து நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வுகள் அனைத்தும் முடிவுற்றதும் உபவேந்தருடனான பிரத்தியேக கலந்துரையாடல் ன்றும் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் முன்னணிவகிக்கும் கம்பனிகளின் பிரதிநிதிகளும் அமைச்சின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு எதிர்கால தொழில் வழங்குணர்களுடன் மாணவர்களை இணைத்து அவர்களின் தேவையை நிறைவு செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.